சங்கீதம்– ௧௪௩
தாவீதின் பாடல்
௧ கர்த்தாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும். ௨ உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும். ௩ எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான். ௪ என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. ௫ ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். ௬ என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா) ௭ கர்த்தாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும். ௮ அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். ௯ கர்த்தாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். ௧௦ உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும். ௧௧ கர்த்தாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும். ௧௨ உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; நான் உமது அடியேன்.