2
 1 யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான்.  2 அவன் சொன்னதாவது: 
“என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், 
நீர் எனக்குப் பதிலளித்தீர்; 
பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், 
நீர் எனது அழுகையைக் கேட்டீர். 
 3 நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர், 
நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர், 
நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின; 
உமது அலைகளும், அலையின் நுரைகளும் 
என்மேல் புரண்டன. 
 4 ‘உமது முன்னிலையிலிருந்து 
நான் துரத்தப்பட்டேன். 
இருந்தாலும், நான் திரும்பவும் 
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன். 
 5 என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது, 
ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது; 
கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன. 
 6 மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன், 
கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது. 
ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே, 
நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர். 
 7 “யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில் 
நான் உம்மையே நினைத்தேன், 
என் மன்றாட்டு மேலெழுந்து 
உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது. 
 8 “சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்; 
அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள். 
 9 ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே 
உமக்குப் பலியிடுவேன். 
நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன். 
‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’ ” என்றான். 
 10 யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது.