சங்கீதம் 13
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்துவிடுவீர்? 
எப்பொழுதுமே மறந்துவிடுவீரோ? 
நீர் எவ்வளவு காலத்திற்கு என்னிடமிருந்து உமது முகத்தை மறைத்துக்கொள்வீர்? 
 2 எவ்வளவு காலத்திற்கு நான் என் எண்ணங்களுடன் போராட வேண்டும்? 
எவ்வளவு காலத்திற்கு அனுதினமும் என் இருதயத்தில் துக்கத்தோடு இருக்கவேண்டும்? 
என் பகைவன் எவ்வளவு காலத்திற்கு என்னை வெற்றிகொள்வான்? 
 3 என் இறைவனாகிய யெகோவாவே, என்னை நோக்கிப்பாரும்; எனக்குப் பதில் கொடும். 
என் கண்களுக்கு ஒளியைத் தாரும்; அல்லது நான் மரணத்தில் உறங்கி விடுவேன். 
 4 அப்பொழுது என் பகைவன், “நான் அவனை மேற்கொண்டேன்” என்பான்; 
நான் விழும்போது என் எதிரிகளும் மகிழ்வார்கள். 
 5 ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்; 
என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது. 
 6 யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார், 
அதினால் நான் அவருக்குத் துதி பாடுவேன்.