சங்கீதம் 30
ஆலய பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன், 
ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்; 
என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை. 
 2 என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; 
நீர் என்னை சுகமாக்கினீர். 
 3 யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; 
குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர். 
 4 யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்; 
அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள். 
 5 அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே, 
ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்; 
இரவிலே அழுகை இருந்தாலும், 
காலையிலோ மகிழ்ச்சி வரும். 
 6 நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது, 
“நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன். 
 7 யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது, 
என்னுடைய மலையை* 30:7 அதாவது, சீயோன் மலை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்; 
ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது, 
நான் மனம்சோர்ந்து போனேன். 
 8 யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்; 
யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன். 
 9 “நான் அழிந்து 
குழிக்குள் போவதால் என்ன பயன்? 
தூசி உம்மைத் துதிக்குமோ? 
அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ? 
 10 யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும். 
யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.” 
 11 என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்; 
நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு, 
மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர். 
 12 ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்; 
என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.