சங்கீதம் 38
நினைவுகூருதலுக்கான விண்ணப்பமாகிய தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்; 
உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும். 
 2 உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன; 
உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது. 
 3 உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை; 
என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. 
 4 நான் தாங்கமுடியாத சுமையைப்போல 
என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று. 
 5 என் மதிகேட்டினால் 
எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. 
 6 நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்; 
நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன். 
 7 எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது; 
என் உடலில் சுகமே இல்லை. 
 8 நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்; 
உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன். 
 9 யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; 
என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை. 
 10 என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது; 
என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று. 
 11 எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், 
என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். 
என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள். 
 12 என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; 
எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்; 
நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள். 
 13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், 
ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். 
 14 காது காதுகேட்காதவனும், 
தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன். 
 15 யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்; 
என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும். 
 16 “என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்; 
அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன். 
 17 நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்; 
என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. 
 18 என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்; 
என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன். 
 19 காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்; 
எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள். 
 20 நான் நன்மையானதைச் செய்தபோதும், 
நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள் 
என்னைக் குற்றப்படுத்துகிறார்கள். 
 21 யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; 
என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம். 
 22 என் இரட்சகராகிய யெகோவாவே, 
எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.