சங்கீதம் 43
 1 இறைவனே, என் நீதியை மெய்ப்பித்துக் காட்டும்; 
இறை பக்தியற்ற நாட்டினருக்கு விரோதமாய் 
எனக்காக வழக்காடும், 
வஞ்சகமும் கொடுமையுமான மனிதரிடமிருந்து 
என்னைத் தப்புவியும். 
 2 ஏனெனில் நீரே என் இறைவன், என் கோட்டை. 
நீர் ஏன் என்னைப் புறக்கணித்துவிட்டீர்? 
பகைவனால் ஒடுக்கப்பட்டு, 
நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்? 
 3 உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்; 
அவை எனக்கு வழிகாட்டட்டும். 
நீர் குடியிருக்கும் இடமான 
உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும். 
 4 அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்; 
என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன். 
இறைவனே, என் இறைவனே, 
யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன். 
 5 என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? 
ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? 
இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; 
நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக 
இன்னும் அவரைத் துதிப்பேன்.