சங்கீதம் 46
அலாமோத்தில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாடல். 
 1 இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார், 
ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே. 
 2 ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும் 
மலைகள் கடலின் நடுவில் விழுந்தாலும் 
 3 கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும் 
அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம். 
 4 ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும் 
பரிசுத்த இடமான இறைவனின் நகரத்தை மகிழ்ச்சியாக்குகின்றன. 
 5 இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது; 
அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார். 
 6 நாடுகள் குமுறி எழுகின்றார்கள், அரசுகள் விழுகின்றன; 
யெகோவா தன் குரலை எழுப்புகிறார், பூமி உருகுகிறது. 
 7 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; 
யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார். 
 8 யெகோவாவினுடைய செயல்களையும் 
அவர் பூமியின்மேல் கொண்டுவந்த அழிவுகளையும் வந்து பாருங்கள். 
 9 யெகோவா பூமியின் கடைசிவரை 
யுத்தங்களை நிறுத்துகிறார்; 
அவர் வில்லை முறித்து, ஈட்டியை நொறுக்குகிறார்; 
கேடயங்களை நெருப்பினால் எரிக்கிறார். 
 10 யெகோவா சொல்கிறார், “நீங்கள் அமைதியாய் இருந்து 
நானே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள். 
நான் நாடுகளுக்கு மத்தியில் புகழ்ந்து உயர்த்தப்படுவேன், 
நான் பூமியிலே புகழ்ந்து உயர்த்தப்படுவேன்.” 
 11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; 
யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.