சங்கீதம் 48
கோராகியரின் சங்கீதப் பாட்டு. 
 1 யெகோவா மிகவும் பெரியவர், 
நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் 
அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். 
 2 சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், 
முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது, 
வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது 
மகா அரசரின் நகரம். 
 3 இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, 
அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார். 
 4 அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து 
முன்னேறி வந்தபோது, 
 5 சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, 
திகிலடைந்து தப்பி ஓடினார்கள். 
 6 அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; 
பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது. 
 7 யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், 
தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர். 
 8 நாம் கேள்விப்பட்டது போலவே, 
சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில், 
நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில் 
நாம் கண்டும் இருக்கிறோம்: 
இறைவன் அந்தப் பட்டணத்திற்கு 
என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார். 
 9 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, 
உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம். 
 10 இறைவனே, உமது பெயரைப் போலவே 
உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; 
உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. 
 11 உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் 
சீயோன் மலை களிகூருகிறது, 
யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது. 
 12 சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; 
அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள். 
 13 அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு 
நீங்கள் சொல்லும்படி, 
அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்; 
கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள். 
 14 ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; 
மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.