சங்கீதம் 85
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட கோராகின் மகன்களின் சங்கீதம். 
 1 யெகோவாவே, நீர் உமது நாட்டுக்குத் தயவு காட்டினீர்; 
யாக்கோபின் மக்கள் இழந்த நல்ல நிலையை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்தீர். 
 2 நீர் உமது மக்களின் அநியாயத்தை மன்னித்து, 
அவர்களுடைய பாவங்களையெல்லாம் மூடிவிட்டீர். 
 3 நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு, 
உமது பெருங்கோபத்திலிருந்தும் திரும்பினீர். 
 4 எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்; 
எங்கள் மேலுள்ள உமது கோபத்தை அகற்றும். 
 5 நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ? 
உமது கோபத்தைத் தலைமுறைகள்தோறும் நீடிக்கச் செய்வீரோ? 
 6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி 
நீர் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்கமாட்டீரோ? 
 7 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து, 
உமது இரட்சிப்பை எங்களுக்குத் தாரும். 
 8 யெகோவாவாகிய இறைவன் சொல்வதை நான் கேட்பேன்; 
அவர் தமது மக்களுக்கும் தமது பரிசுத்தவான்களுக்கும் சமாதானத்தை வாக்குப் பண்ணுகிறார்; 
ஆனால் அவர்கள் மதியீனத்துக்குத் திரும்பாதிருக்கட்டும். 
 9 அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு, 
அவருடைய இரட்சிப்பு நிச்சயமாகவே சமீபமாய் இருப்பதால், 
அவருடைய மகிமையும் நமது நாட்டில் தங்கியிருக்கும். 
 10 அன்பும் உண்மையும் ஒன்றாய்ச் சந்திக்கின்றன; 
நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தம் செய்கின்றன. 
 11 உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது, 
நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கிறது. 
 12 யெகோவா உண்மையாகவே நன்மையானதைத் தருவார்; 
நம்முடைய நாடும் அதின் விளைச்சலைக் கொடுக்கும். 
 13 நீதி அவருக்கு முன்சென்று, 
அவருடைய காலடிகளுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறது.