சங்கீதம் 92
ஓய்வுநாளுக்கான பாடலாகிய சங்கீதம். 
 1 யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, 
உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது. 
 2 காலையிலே உமது அன்பையும் 
இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது. 
 3 பத்து நரம்பு வீணையின் இசையினாலும், 
யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது. 
 4 யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்; 
உமது கைகளின் வேலைகளினிமித்தம் நான் மகிழ்ந்து பாடுகிறேன். 
 5 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை, 
உம்முடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை! 
 6 உணர்வற்ற மனிதன் அறியாததும், 
மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே, 
 7 கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும், 
தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும், 
என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள். 
 8 ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர். 
 9 யெகோவாவே, உமது பகைவர், 
நிச்சயமாகவே உம்முடைய பகைவர் அழிந்தேபோவார்கள்; 
தீமை செய்வோர் எல்லோருமே சிதறடிக்கப்படுவார்கள். 
 10 காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்; 
சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன. 
 11 என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்; 
என் செவிகள் என் கொடிய எதிரிகள் முறியடிக்கப்படுவதைக் காதாரக் கேட்டேன். 
 12 நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள், 
அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்; 
 13 அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு, 
நமது இறைவனுடைய ஆலய முற்றங்களில் செழிப்பார்கள். 
 14 அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, 
தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள். 
 15 “யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை; 
அவரிடத்தில் அநீதி இல்லை” என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள்.