சங்கீதம் 112
 1 அல்லேலூயா. 
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும், 
அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். 
 2 அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; 
நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். 
 3 செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; 
அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது. 
 4 நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; 
ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள். 
 5 தாராள மனதுடன் கடன்கொடுத்து, 
தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும். 
 6 நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; 
நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள். 
 7 துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; 
அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது. 
 8 அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; 
கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான். 
 9 அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; 
அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; 
அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான். 
 10 கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; 
அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்; 
கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.