சங்கீதம் 120
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 
 1 நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 
அவர் எனக்குப் பதிலளிக்கிறார். 
 2 யெகோவாவே, 
பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், 
வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும். 
 3 வஞ்சக நாவே, 
இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? 
அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? 
 4 போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், 
சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார். 
 5 ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே 
வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; 
கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே! 
 6 சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் 
நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. 
 7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; 
அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.