சங்கீதம் 129
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 
 1 “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று 
இஸ்ரயேலர் சொல்லட்டும்; 
 2 “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், 
ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை. 
 3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, 
தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். 
 4 ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; 
அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.” 
 5 சீயோனை வெறுக்கிற அனைவரும் 
வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும். 
 6 அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; 
அது வளரும் முன்பு வாடிப்போகுமே. 
 7 அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; 
அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது. 
 8 வழிப்போக்கர்கள் அவர்களிடம், 
“யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; 
யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” 
என்றும் சொல்லாதிருக்கட்டும்.