சங்கீதம் 143
தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும், 
இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்; 
உமது உண்மையின்படியும் 
நீதியின்படியும் எனக்கு பதில் தாரும். 
 2 உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும். 
வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே. 
 3 பகைவன் என்னைப் பின்தொடர்கிறான், 
அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்; 
வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல், 
அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான். 
 4 ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது; 
பயத்தால் என் இருதயம் கலங்குகிறது. 
 5 நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்; 
உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்; 
உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். 
 6 நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; 
வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது. 
 7 யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; 
என் உள்ளம் சோர்ந்துபோகிறது; 
உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால், 
நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன். 
 8 காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், 
ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; 
நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், 
ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன். 
 9 யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; 
ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன். 
 10 நீரே என் இறைவன்; 
ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்; 
உமது நல்ல ஆவியானவர் 
என்னை நல்வழியில் நடத்துவாராக. 
 11 யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; 
உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும். 
 12 உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்; 
என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்; 
ஏனெனில் நான் உமது அடியவன்.