சங்கீதம் 149
 1 யெகோவாவைத் துதியுங்கள்* 149:1 துதியுங்கள் என்பது எபிரெயத்தில் அல்லேலூயா; வசனம் 9 லும் உள்ளது.. 
யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள், 
பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள். 
 2 இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; 
சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும். 
 3 அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும், 
தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும். 
 4 ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; 
தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார். 
 5 பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து 
தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள். 
 6 அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், 
கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக. 
 7 அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும், 
மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும், 
 8 அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும், 
அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும், 
 9 அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை 
நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக. 
இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை. 
யெகோவாவைத் துதியுங்கள்.