3
 1 இரவு முழுவதும் என் படுக்கையில் இருந்தேன்; 
என் உயிர்க் காதலரை நான் தேடினேன். 
நான் அவரைத் தேடியும், அவரைக் காணவில்லை. 
 2 நான் இப்பொழுதே எழுந்திருப்பேன், பட்டணத்தின் வீதிகளிலும் 
பொது இடங்களிலும் போய்ப்பார்ப்பேன். 
அங்கே நான் என் உயிர்க் காதலரைத் தேடுவேன். 
அப்படியே நான் அவரைத் தேடினேன், ஆனாலும் அவரைக் காணவில்லை. 
 3 காவலர்கள் பட்டணத்தைச் சுற்றித் திரிகையில் 
என்னைக் கண்டார்கள். 
“என் உயிர்க் காதலரைக் கண்டீர்களா?” என்று நான் கேட்டேன். 
 4 அவர்களை நான் கடந்துசென்றதும் என் உயிர்க் காதலரை நான் கண்டேன். 
நான் அவரைப் பிடித்துக்கொண்டேன்; 
என் தாயின் வீட்டிற்கும், என்னைப் பெற்றவளின் அறைக்கும் 
கூட்டிக்கொண்டு போகும்வரை 
நான் அவரைப் போகவிடவேயில்லை. 
 5 எருசலேமின் மங்கையரே, 
கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை! 
காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், 
அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம். 
 6 பாலைவனத்திலிருந்து புகைமண்டலத்தைப்போல 
வருகின்ற இவர் யார்? 
வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, 
வர்த்தகர்களின் வாசனைத் திரவியங்கள் யாவும் மணங்கமழ வருகின்ற இவர் யார்? 
 7 இதோ, சாலொமோனின் படுக்கை! 
இஸ்ரயேலின் மிகச்சிறந்த வீரர்களில் 
அறுபது வீரர்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள். 
 8 அவர்கள் எல்லோரும் வாளேந்திய வீரர்கள், 
அவர்கள் யுத்தத்தில் அனுபவமிக்கவர்கள், 
இரவின் பயங்கரத்தை எதிர்க்க 
தம் இடுப்பில் வாள் கொண்டுள்ளவர்கள். 
 9 சாலொமோன் அரசன் தனக்கென லெபனோனின் மரத்தினால் 
ஒரு பல்லக்கை செய்தார். 
 10 அதின் தூண்களை வெள்ளியினாலும், 
அதின் சாய்மனையைத் தங்கத்தினாலும், 
உட்காருமிடத்தை இரத்தாம்பர நிற மெத்தையினாலும் செய்ய வைத்தார்; 
அதின் உட்புறத்தை எருசலேமின் மங்கையர் 
தங்கள் அன்பால் அலங்கரித்திருந்தார்கள்.  11 சீயோனின் மகள்களே, 
வெளியே வாருங்கள். 
சாலொமோன் அரசன் மகுடம் அணிந்திருப்பதைப் பாருங்கள், 
அவருடைய உள்ளம் மகிழ்ச்சியுற்ற நாளான 
அவருடைய திருமண நாளிலேயே 
அந்த மகுடத்தை அவருடைய தாயார் அவருக்குச் சூட்டினாள்.