அத்தியாயம் 22
தாவீதின் துதிப் பாடல் 
 1 யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு: 
 2 “யெகோவா என்னுடைய கன்மலையும், 
என்னுடைய கோட்டையும், 
என்னுடைய இரட்சகருமானவர். 
 3 தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், 
என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், 
என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், 
என்னுடைய இருப்பிடமும், 
என்னுடைய இரட்சகருமானவர்; 
என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே. 
 4 துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; 
அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன். 
 5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, 
பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது. 
 6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; 
மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 
 7 எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, 
என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்; 
தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்; 
என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது. 
 8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; 
அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. 
 9 அவர் நாசியிலிருந்து புகை வந்தது, 
அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது, 
அதனால் தீப்பற்றிக்கொண்டது. 
 10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. 
 11 கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். 
காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார். 
 12 வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார். 
 13 அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது. 
 14 யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, 
சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார். 
 15 அவர் அம்புகளை எய்து, 
அவர்களைச் சிதறடித்து, 
மின்னல்களை உபயோகித்து, 
அவர்களைச் சிதறடித்தார். 
 16 யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, 
பூமியின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. 
 17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, 
என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். 
 18 என்னைவிட பெலவானாக இருந்த 
என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார். 
 19 என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; 
யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார். 
 20 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், 
என்னைத் தப்புவித்தார்.* 22:20 விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து 
 21 யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; 
என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி 
எனக்குச் சரிக்கட்டினார். 
 22 யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; 
நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை. 
 23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; 
நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல், 
 24 அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து, 
பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். 
 25 ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், 
தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார். 
 26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், 
உத்தமனுக்கு நீர் உத்தமராகவும், 
 27 புனிதனுக்கு நீர் புனிதராகவும், 
மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 
 28 சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்; 
பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த, 
உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்கிறது. 
 29 கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; 
யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர். 
 30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்† 22:30 மிதிப்பேன்; 
என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். 
 31 தேவனுடைய வழி உத்தமமானது; 
யெகோவாவுடைய வசனம் சுத்தமானது; 
தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். 
 32 யெகோவாவைத் தவிர தேவன் யார்? 
நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்? 
 33 தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; 
அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். 
 34 அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, 
உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார். 
 35 வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, 
என்னுடைய கைகளை யுத்தத்திற்குப். 
 36 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; 
உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும். 
 37 என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 
 38 என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; 
அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன். 
 39 அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்; 
அவர்களை முறியடித்து வெட்டினேன். 
 40 யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, 
என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர். 
 41 நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, 
என்னுடைய எதிரிகளின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். 
 42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், 
அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை; 
யெகோவாவை நோக்கிப் பார்க்கிறார்கள், 
அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை. 
 43 அவர்களை பூமியின் தூளாக இடித்து, 
தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறச்செய்கிறேன். 
 44 என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, 
தேசங்களுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; 
நான் அறியாத மக்கள் என்னைப் பணிகிறார்கள். 
 45 அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி, 
என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள். 
 46 அந்நியர்கள் பயந்துபோய், 
தங்கள் கோட்டைகளிலிருந்து பயத்தோடு புறப்படுகிறார்கள். 
 47 யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; 
என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக. 
 48 அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, 
மக்களை எனக்குக் 
கீழ்ப்படுத்துகிற தேவனானவர். 
 49 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; 
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல் 
என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். 
 50 இதனால் யெகோவாவே, 
தேசங்களுக்குள் உம்மைத் துதித்து, 
உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன். 
 51 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு 
மகத்தான இரட்சிப்பை அளித்து, 
தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் 
அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.”