அத்தியாயம் 13
ஞானியின் நடவடிக்கை 
 1 ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; 
பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான். 
 2 மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; 
துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும். 
 3 தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; 
தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான். 
 4 சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; 
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; 
 5 நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; 
துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான். 
 6 நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; 
துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். 
 7 ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; 
மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு. 
 8 மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; 
தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான். 
 9 நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; 
துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும். 
 10 அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; 
ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. 
 11 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; 
கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான். 
 12 நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; 
விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும். 
 13 திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; 
கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். 
 14 ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; 
அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 
 15 நற்புத்தி தயவை உண்டாக்கும்; 
துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. 
 16 விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; 
மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். 
 17 துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; 
உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து. 
 18 புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; 
கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான். 
 19 வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; 
தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு. 
 20 ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; 
மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான். 
 21 பாவிகளைத் தீவினை தொடரும்; 
நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். 
 22 நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; 
பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். 
 23 ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; 
நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. 
 24 பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; 
அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். 
 25 நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; 
துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.