சங்கீதம் 16
தாவீதின் மிக்தாம் என்னும் பாடல். 
 1 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். 
 2 என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி: 
தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர், 
என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்; 
 3 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், 
நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், 
அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய். 
 4 அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; 
அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், 
அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன். 
 5 யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; 
என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர். 
 6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; 
ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு. 
 7 எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்; 
இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும். 
 8 யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; 
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் 
நான் அசைக்கப்படுவதில்லை. 
 9 ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; 
என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும். 
 10 என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; 
உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. 
 11 வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; 
உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், 
உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.