சங்கீதம் 30
ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல். 
 1 யெகோவாவே, 
என்னுடைய எதிரிகள் 
என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், 
நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், 
நான் உம்மைப் போற்றுவேன். 
 2 என் தேவனாகிய யெகோவாவே, 
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், 
என்னை நீர் குணமாக்கினீர். 
 3 யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, 
நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். 
 4 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, 
அவரைப் புகழ்ந்துபாடி, 
அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள். 
 5 ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, 
அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; 
மாலையில் அழுகை வரும், 
அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும். 
 6 நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, 
நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன். 
 7 யெகோவாவே, உம்முடைய தயவினால் 
நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; 
உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்; 
 8 நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு? 
புழுதி உம்மைத் துதிக்குமோ? 
அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ? 
 9 யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து 
என்மேல் இரக்கமாக இரும்; 
யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி; 
 10 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; 
யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன். 
 11 என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; 
என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் 
உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக 
நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, 
மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர். 
 12 என் தேவனாகிய யெகோவாவே, 
உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.