சங்கீதம் 50
ஆசாபின் பாடல். 
 1 வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, 
சூரியன் உதிக்கும்திசை தொடங்கி 
அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். 
 2 அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். 
 3 நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; 
அவருக்கு முன்பு அக்கினி அழியும்; 
அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும். 
 4 அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க 
உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். 
 5 பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த 
என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். 
 6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; 
தேவனே நியாயாதிபதி. (சேலா) 
 7 என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, 
உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; 
நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன். 
 8 உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; 
உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது. 
 9 உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், 
உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. 
 10 எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். 
 11 மலைகளிலுள்ள* 50:11 ஆகாயத்தின் பறவைகளையெல்லாம் அறிவேன்; 
வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். 
 12 நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; 
பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. 
 13 நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, 
ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? 
 14 நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி; 
 15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; 
நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 
 16 தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், 
என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. 
 17 அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். 
 18 நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; 
விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. 
 19 உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், 
உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது. 
 20 நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, 
உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய். 
 21 இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், 
உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; 
ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, 
அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். 
 22 தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; 
இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், 
ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. 
 23 நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; 
தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு 
தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.