சங்கீதம் 69
சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். 
 1 தேவனே, என்னைக் காப்பாற்றும்; 
வெள்ளங்கள் என்னுடைய ஆத்துமாவரை பெருகிவருகிறது. 
 2 ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, 
ஆழமான தண்ணீரில் இருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. 
 3 நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; 
என்னுடைய தொண்டை வறண்டுபோனது; 
என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது, 
என்னுடைய கண்கள் பூத்துப்போனது. 
 4 காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்; 
வீணாக எனக்கு எதிரிகளாகி என்னை அழிக்கவேண்டும் என்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; 
நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதானது. 
 5 தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; 
என்னுடைய குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை. 
 6 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, 
உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னால் வெட்கப்பட்டுப் போகாமலிருப்பார்களாக; 
இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் வெட்கமடையாதிருப்பார்களாக. 
 7 உமக்காக நிந்தையைச் சகித்தேன்; 
அவமானம் என்னுடைய முகத்தை மூடினது. 
 8 என்னுடைய சகோதரர்களுக்கு வேற்று மனிதனும், என்னுடைய தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். 
 9 உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது; 
உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது. 
 10 என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; 
அதுவும் எனக்கு நிந்தையாக முடிந்தது. 
 11 சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்; 
அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன். 
 12 வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்; 
மதுபானம் குடிக்கிறவர்களின் பாடலானேன். 
 13 ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்; 
தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும். 
 14 நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்; 
என்னைப் பகைக்கிறவர்களிடத்திலிருந்தும் ஆழமான தண்ணீர்களில் இருந்தும் நான் நீங்கும்படி செய்யும். 
 15 வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், 
பாதாளம் என்மேல் தன்னுடைய வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக. 
 16 யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும், 
உம்முடைய தயை நலமாயிருக்கிறது; 
உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கண்ணோக்கியருளும். 
 17 உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; 
நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாகச் செவிகொடுத்தருளும். 
 18 நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைசெய்யும்; 
என்னுடைய எதிரிகளுக்காக என்னை மீட்டுவிடும். 
 19 தேவனே நீர் என்னுடைய நிந்தையையும் 
என்னுடைய வெட்கத்தையும் என்னுடைய அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; 
என்னுடைய எதிரிகள் எல்லோரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். 
 20 நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; 
நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; 
எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், 
ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், 
ஒருவனும் இல்லை. 
 21 என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், 
என்னுடைய தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். 
 22 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், 
அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும். 
 23 அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்; 
அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடச்செய்யும். 
 24 உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; 
உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக. 
 25 அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்; 
அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக. 
 26 தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, 
நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே. 
 27 அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக. 
 28 ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக; 
நீதிமான்கள் பெயரோடே அவர்கள் பெயர் எழுதப்படாதிருப்பதாக. 
 29 நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; 
தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. 
 30 தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, 
அவரை நன்றி சொல்லி மகிமைப்படுத்துவேன். 
 31 கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, 
இதுவே யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கும். 
 32 சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; 
தேவனைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இருதயம் வாழும். 
 33 யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், 
கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணிக்கமாட்டார். 
 34 வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும். 
 35 தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; 
அப்பொழுது அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள். 
 36 அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்; 
அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அதில் குடியிருப்பார்கள்.