சங்கீதம் 75
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். 
 1 உம்மைத் துதிக்கிறோம், 
தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; 
உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது. 
 2 நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன். 
 3 பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது; 
அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) 
 4 வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; 
துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன். 
 5 உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; 
உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள். 
 6 கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. 
 7 தேவனே நியாயாதிபதி; 
ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். 
 8 கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது, 
அதிலிருந்து ஊற்றுகிறார்; 
பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். 
 9 நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, 
யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன். 
 10 துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; 
நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.