சங்கீதம் 143
தாவீதின் பாடல். 
 1 யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், 
என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; 
உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும். 
 2 உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, 
அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும். 
 3 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, 
என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, 
வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான். 
 4 என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; 
என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. 
 5 ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; 
உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். 
 6 என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; 
வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா) 
 7 யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், 
என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; 
நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, 
உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும். 
 8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், 
உம்மை நம்பியிருக்கிறேன், 
நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; 
உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 
 9 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; 
உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். 
 10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், 
நீரே என் தேவன்; 
உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும். 
 11 யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; 
உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை 
பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும். 
 12 உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, 
என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; 
நான் உமது அடியேன்.