சங்கீதம் 147
 1 யெகோவாவை துதியுங்கள்; 
நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, 
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. 
 2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; 
துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். 
 3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், 
அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 
 4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, 
அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். 
 5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; 
அவருடைய அறிவு அளவில்லாதது. 
 6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; 
துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். 
 7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; 
நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். 
 8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, 
பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, 
மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். 
 9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். 
 10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; 
வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். 
 11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் 
யெகோவா பிரியமாக இருக்கிறார். 
 12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; 
சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. 
 13 அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, 
உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். 
 14 அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, 
செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். 
 15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; 
அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது. 
 16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; 
சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். 
 17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; 
அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? 
 18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; 
தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். 
 19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், 
இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். 
 20 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; 
அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். 
அல்லேலூயா.