14
மனந்திரும்புதலின் ஆசீர்வாதம் 
 1 இஸ்ரயேலே, உன் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பு; 
உன் பாவங்களே நீ விழுந்துபோவதற்குக் காரணமாய் அமைந்தன. 
 2 நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன் 
யெகோவாவிடம் திரும்புங்கள்; 
நீங்கள் அவரிடம், 
“எங்கள் பாவங்களையெல்லாம் மன்னியும், 
எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்ளும்; 
அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை 
காளைகளின் பலியாய் செலுத்துவோம் என்று சொல்லுங்கள். 
 3 அசீரியா நாடு எங்களைக் காப்பாற்றமாட்டாது; 
நாங்கள் போர்க் குதிரைகளில் ஏறமாட்டோம். 
எங்கள் கைகளினால் நாங்கள் செய்த விக்கிரகங்களை 
‘எங்கள் தெய்வம்’ என இனி ஒருபோதும் சொல்லமாட்டோம்; 
ஏனெனில் உம்மிடமே திக்கற்றவர்கள் கருணை பெறுகிறார்கள் என்று கூறுங்கள்.” 
 4 “நான் அவர்களுடைய பின்மாற்றத்தைக் குணமாக்குவேன், 
நான் அவர்களில் அதிகமாய் அன்பு செலுத்துவேன், 
எனது கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று. 
 5 நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்; 
அவன் லில்லியைப்போல் பூப்பான். 
லெபனோனின் கேதுருபோல் 
வேரூன்றி நிற்பான். 
 6 அவனுடைய இளந்தளிர்கள் வளரும். 
அவனுடைய புகழ் ஒலிவமரத்தைப் போலவும், 
அவனுடைய வாசனை லெபனோனின் கேதுரு போலவும் இருக்கும். 
 7 திரும்பவும் மனிதர்கள் அவனுடைய நிழலில் குடியிருப்பார்கள்; 
அவன் தானியத்தைப்போல் செழிப்பான். 
திராட்சைக் கொடியைப்போல் பூப்பான்; 
அவனுடைய புகழ் லெபனோனின் திராட்சை இரசம்போல் இருக்கும். 
 8 எப்பிராயீமுக்கு விக்கிரகங்களுடன் இனியும் வேலை இல்லை; 
இனிமேல் நான் அவனுடைய வேண்டுதலுக்குப் பதில் கொடுத்து, அவனைப் பராமரிப்பேன். 
நான் அவர்களுக்குப் பசுமையான தேவதாரு மரம் போலிருக்கிறேன். 
அவர்களுடைய பலன்களின் நிறைவுகளெல்லாம் என்னிடமிருந்தே வருகின்றன.” 
 9 ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான். 
பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான். 
யெகோவாவின் வழிகள் நீதியானவைகள்; 
நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள், 
ஆனால் கலகக்காரர்கள் அவைகளில் இடறி விழுகிறார்கள்.