அத்தியாயம் 4
ஞானமே பிரதானம் 
 1 பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, 
புத்தியை அடையும்படி கவனியுங்கள். 
 2 நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; 
என் உபதேசத்தை விடாதிருங்கள். 
 3 நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், 
என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். 
 4 அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: 
உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; 
என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். 
 5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; 
என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு. 
 6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; 
அதின்மேல் பிரியமாக இரு, 
அது உன்னைக் காத்துக்கொள்ளும். 
 7 ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; 
என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். 
 8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; 
நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும். 
 9 அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; 
அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும். 
 10 என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; 
அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். 
 11 ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; 
செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். 
 12 நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; 
நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். 
 13 புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், 
அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். 
 14 துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; 
தீயோர்களுடைய வழியில் நடக்காதே. 
 15 அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; 
அதைவிட்டு விலகிக் கடந்துபோ. 
 16 தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; 
அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும். 
 17 அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, 
கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். 
 18 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் 
அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும். 
 19 துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; 
தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள். 
 20 என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; 
என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். 
 21 அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; 
அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள். 
 22 அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், 
அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். 
 23 எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், 
அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும். 
 24 வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, 
உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. 
 25 உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; 
உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும். 
 26 உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; 
உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும். 
 27 வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; 
உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.