சங்கீதம் 14
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 “இறைவன் இல்லை” என்று 
மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான். 
அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை; 
நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. 
 2 யெகோவா பரலோகத்திலிருந்து 
மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், 
அவர்களில் விவேகமுள்ளவனாவது 
இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். 
 3 எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; 
நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, 
ஒருவனாகிலும் இல்லை. 
 4 தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? 
மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; 
அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை. 
 5 அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்; 
ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார். 
 6 தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்; 
ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம். 
 7 சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! 
யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது 
யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!