சங்கீதம் 36
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட யெகோவாவினுடைய ஊழியனாகிய தாவீதின் சங்கீதம். 
 1 இறைவனிடமிருந்து என் உள்ளத்திற்கு வந்த செய்தி: 
கொடியவர்களின் பாவம் அவர்களுடைய இருதயங்களில் நிலைத்திருக்கிறது; 
அவர்களுடைய கண்களில் 
இறைவனைப்பற்றிய பயம் இல்லை. 
 2 அவர்கள் பார்வையில் தங்களைப் பெருமையாக காணுவதால், 
அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதும் இல்லை; அதை வெறுப்பதுமில்லை. 
 3 அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன; 
அவர்கள் ஞானமாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள். 
 4 அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்; 
பாவவழிக்கு அவர்கள் தங்களை ஒப்புவிக்கிறார்கள்; 
தீமையானதை விடாதிருக்கிறார்கள். 
 5 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும் 
உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது. 
 6 உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது, 
உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது. 
யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். 
 7 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது! 
மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள். 
 8 உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்; 
நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர். 
 9 ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது; 
உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம். 
 10 உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும் 
இருதயத்தில் நீதிமான்களுக்கு உமது நியாயத்தையும் வழங்கும். 
 11 அகந்தை உள்ளவர்களின் கால் எனக்கு விரோதமாய் வராதிருப்பதாக; 
கொடியவர்களின் கை என்னைத் துரத்தி விடாதிருப்பதாக. 
 12 தீமை செய்கிறவர்கள் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் என்று பாரும்! 
அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி, வீசி எறியப்பட்டுக் கிடக்கிறார்கள்.