சங்கீதம் 40
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; 
அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார். 
 2 அழிவின் குழியிலிருந்தும் 
மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார், 
அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி, 
நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார். 
 3 எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான 
புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார். 
அநேகர் அதைக்கண்டு பயந்து, 
யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள். 
 4 பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும், 
அகந்தை உள்ளவர்களைச் சாராமலும், 
யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 
 5 என் இறைவனாகிய யெகோவாவே, 
நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும் 
உம்முடைய திட்டங்களும் அநேகம். 
உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை; 
அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால், 
அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள். 
 6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; 
தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை; 
ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர். 
 7 அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்; 
புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே. 
 8 என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்; 
உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னேன். 
 9 மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்; 
யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி 
நான் என் உதடுகளை மூடுவதில்லை. 
 10 நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை; 
உமது உண்மையையும், 
இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன். 
உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை. 
 11 யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்; 
உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக. 
 12 ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன; 
என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன். 
என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை; 
அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. 
 13 யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்; 
யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். 
 14 என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும் 
வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; 
எனது அழிவை விரும்புகிற யாவரும் 
அவமானமடைந்து திரும்புவார்களாக. 
 15 என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள் 
அவர்களுடைய வெட்கத்தினால் நிலைகுலைந்து போவார்களாக. 
 16 ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் 
உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; 
உமது இரட்சிப்பை விரும்புவோர், “யெகோவா பெரியவர்!” 
என்று எப்போதும் சொல்வார்களாக. 
 17 நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; 
யெகோவா என்னை நினைப்பாராக. 
நீரே என் துணை, நீரே என் மீட்பர்; 
என் இறைவனே, தாமதியாதேயும்.