சங்கீதம் 52
தாவீது அகிமெலேக்கின் வீட்டிற்கு சென்றான் என்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு சொன்னபோது பாடிய மஸ்கீல் என்னும் சங்கீதம். 
 1 பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்? 
இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு 
எந்நாளும் உள்ளது. 
 2 வஞ்சகம் செய்கிறவனே, 
உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது; 
அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது. 
 3 நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும் 
உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய். 
 4 வஞ்சக நாவே, 
நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்! 
 5 இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்: 
அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி, 
வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார். 
 6 இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்; 
அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து, 
 7 “இதோ பாருங்கள், 
இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்; 
தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து, 
தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!” என்பார்கள். 
 8 ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல் 
இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்; 
நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில் 
எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 
 9 நீர் எனக்குச் செய்தவற்றிற்காக உமது பரிசுத்தவான்களுக்கு முன்பாக 
நான் உம்மை என்றென்றும் துதிப்பேன், 
உம்முடைய பெயரில் நான் எதிர்பார்ப்பை வைப்பேன்; 
இறைவனே உமது பெயர் நல்லது.