சங்கீதம் 58
“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம். 
 1 ஆளுநர்களே, உண்மையிலேயே நீங்கள் நீதியைத்தான் பேசுகிறீர்களோ? 
மனிதர் மத்தியில் நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறீர்களோ? 
 2 இல்லை, நீங்கள் உங்கள் இருதயத்தில் அநீதியையே திட்டமிடுகிறீர்கள்; 
உங்கள் கைகள் பூமியின்மேல் வன்முறையைப் பரப்புகிறது. 
 3 கொடியவர்கள் பிறப்பிலிருந்தே வழிதப்பிப் போகிறார்கள்; 
அவர்கள் கர்ப்பத்திலிருந்தே பொய்களைப் பேசுகிறார்கள். 
 4 அவர்களுடைய நச்சுத்தன்மை ஒரு பாம்பின் நஞ்சைப்போல் இருக்கிறது; 
அவர்கள் காதை அடைத்துக்கொள்கிற செவிட்டு நாகம்போல இருக்கிறார்கள். 
 5 இந்த நாகபாம்போ, பாம்பாட்டி எவ்வளவு திறமையாய் ஊதினாலும் 
அவனுடைய இசைக்குக் கவனம் செலுத்தாது. 
 6 இறைவனே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்; 
யெகோவாவே, அந்த சிங்கங்களின் கடைவாய்ப் பற்களைப் பிடுங்கிப்போடும். 
 7 ஓடிப்போகும் தண்ணீரைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்; 
அவர்கள் தங்கள் வில்லை இழுக்கும்போது, அவர்களுடைய அம்புகள் முறிந்து போகட்டும். 
 8 நகரும்போதே கரைந்து போகும் நத்தையைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்; 
ஒரு பெண்ணின் வயிற்றில் சிதைந்த கருவைப்போல, 
சூரியனை அவர்கள் பார்க்காமல் போகட்டும். 
 9 முட்செடிகள் எரிந்து பானை அதின் சூட்டை உணருவதற்கு முன்பதாகவே, 
பச்சையானதையும் எரிந்துபோனதையும் சுழற்காற்று வாரியதைப்போல 
கொடியவர்களை வாரிக்கொள்ளும். 
 10 அவர்கள் பழிவாங்கப்படும்போது நீதிமான்கள் மகிழ்வார்கள்; 
கொடியவர்களின் உயிர் நீதிமான்களின் பாதபடியில் இருக்கும். 
 11 அப்பொழுது மனிதர், 
“நிச்சயமாகவே நீதிமான்களுக்கு வெற்றி உண்டென்றும் 
பூமியை நியாயந்தீர்க்கும் இறைவன் உண்டு” என்றும் சொல்வார்கள்.