சங்கீதம் 63
தாவீதின் சங்கீதம். யூதாவின் வனாந்திரத்திலிருக்கும்போது பாடியது. 
 1 இறைவனே, நீரே என் இறைவன், 
நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்; 
தண்ணீரில்லாமல் வறண்டதும், 
காய்ந்ததுமான நிலத்திலே 
என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, 
என் உடலோ உமக்காக ஏங்குகிறது. 
 2 பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்; 
உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன். 
 3 உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது; 
ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும். 
 4 நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்; 
ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன். 
 5 அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்; 
என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும். 
 6 என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; 
இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன். 
 7 நீரே என் உதவியாயிருப்பதால், 
உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன். 
 8 நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; 
உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. 
 9 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் 
பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள். 
 10 அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; 
நரிகளுக்கு இரையாவார்கள். 
 11 ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்; 
இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்; 
பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும்.