சங்கீதம் 72
சாலொமோனின் சங்கீதம். 
 1 இறைவனே, அரசனுக்கு உமது நியாயமான தீர்ப்பையும் 
இளவரசனுக்கு உமது நீதியையும் கொடும். 
 2 அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும், 
துன்பப்பட்ட உம்முடையவர்களை நேர்மை தவறாமலும் நியாயந்தீர்ப்பார். 
 3 மலைகள் அனைவருக்கும் செழிப்பை உண்டாக்கட்டும், 
குன்றுகள் நீதியின் பலனைக் கொண்டுவரட்டும். 
 4 மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களை அவர் பாதுகாத்து, 
ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்; 
ஒடுக்குவோரை அவர் நொறுக்கிப்போடட்டும். 
 5 சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், 
தலைமுறை தலைமுறையாக அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள். 
 6 அரசர் புல்வெட்டப்பட்ட வயலின்மேல் பொழியும் மழையைப்போலவும், 
பூமியை நீர்ப்பாய்ச்சும் மழைத்தூறலைப் போலவும் 
அரசரின் ஆட்சி புத்துணர்ச்சி அடையட்டும். 
 7 அவருடைய நாட்களில் நீதிமான்கள் செழிப்பார்கள்; 
சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். 
 8 ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும், 
நதிதொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அரசர் ஆளுகை செய்யட்டும். 
 9 பாலைவன வாசிகள் அவருக்குமுன் பணிவார்கள்; 
அவருடைய பகைவர்கள் மண்ணை நக்குவார்கள். 
 10 தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள் 
அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்; 
ஷேபாவும், சேபாவின் அரசர்களும் 
அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும். 
 11 எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்; 
எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும். 
 12 ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும் 
உதவி செய்வாரின்றித் தவிக்கும் எளியோரையும் அவர் விடுவிப்பார். 
 13 பலவீனருக்கும் எளியோருக்கும் அவர் அனுதாபங்காட்டி, 
எளியோரை மரணத்திலிருந்து காப்பாற்றுவார். 
 14 அவர்களை ஒடுக்குதலுக்கும் வன்செயலுக்கும் தப்புவிப்பார்; 
ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை அவருடைய பார்வையில் விலையுயர்ந்ததாய் இருக்கும். 
 15 அவர் நீடித்து வாழ்வாராக! 
சேபாவின் தங்கம் அவருக்குக் கொடுக்கப்படுவதாக; 
மக்கள் எக்காலத்திலும் அவருக்காக மன்றாடி, 
நாள்தோறும் அவரை ஆசீர்வதிப்பார்களாக. 
 16 நாட்டிலே தானியம் மிகுதியாக விளையட்டும்; 
குன்றுகளின் உச்சியில் தானியக்கதிர்கள் அசையட்டும்; 
அதின் உற்பத்தி லெபனோனைப்போல செழிக்கட்டும்; 
அதின் பட்டணத்தார் வெளியின் புல்லைப்போல் செழித்து வளருவார்களாக. 
 17 அவருடைய பெயர் என்றும் நிலைத்திருப்பதாக; 
சூரியன் உள்ளமட்டும் அது தொடர்ந்திருப்பதாக. 
எல்லா நாடுகளும் அவர்மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்; 
அவர்கள் அவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அழைப்பார்கள். 
 18 இஸ்ரயேலின் இறைவனாயிருக்கிற, யெகோவாவாகிய இறைவனுக்குத் துதி உண்டாவதாக; 
அவர் அதிசயமான செயல்களைச் செய்கிறார். 
 19 அவருடைய மகத்துவமான பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; 
பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்புவதாக. 
ஆமென், ஆமென். 
 20 ஈசாயின் மகன் தாவீதின் மன்றாட்டுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன.