சங்கீதம் 82
ஆசாபின் சங்கீதம். 
 1 மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; 
“கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்: 
 2 “நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, 
கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்? 
 3 பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; 
ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள். 
 4 பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; 
அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள். 
 5 “அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; 
அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; 
பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன. 
 6 “ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; 
நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன். 
 7 ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; 
மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.” 
 8 இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; 
ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.