சங்கீதம் 86
தாவீதின் மன்றாட்டு. 
 1 யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும், 
ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன். 
 2 நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; 
உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும். 
நீரே என் இறைவன்;  3 என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே, 
நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 
 4 யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்; 
ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன். 
 5 யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்; 
உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர். 
 6 யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்; 
இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும். 
 7 என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; 
ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர். 
 8 யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை; 
உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது. 
 9 யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும் 
உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்; 
அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள். 
 10 நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்; 
நீர் ஒருவரே இறைவன். 
 11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; 
அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்; 
நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி 
ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். 
 12 என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; 
உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன். 
 13 நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; 
நீர் என்னை ஆழங்களிலிருந்தும் 
பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். 
 14 இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்; 
கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர், 
அவர்கள் உம்மை மதிக்காதவர்கள். 
 15 ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்; 
கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர். 
 16 என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்; 
உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்; 
என்னைக் காப்பாற்றும், 
ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன். 
 17 என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக, 
உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்; 
ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர்.