சங்கீதம் 122
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். 
 1 “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” 
என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். 
 2 எருசலேமே, எங்கள் கால்கள் 
உன் வாசல்களில் நிற்கின்றன. 
 3 நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், 
எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது. 
 4 யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, 
கோத்திரங்கள் அங்கு போவார்கள்; 
இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, 
யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள். 
 5 தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; 
அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள். 
 6 எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: 
“உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள். 
 7 உன் மதில்களுக்குள் சமாதானமும், 
உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.” 
 8 என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் 
“உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன். 
 9 எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், 
நான் உன் செழிப்பைத் தேடுவேன்.