சங்கீதம் 132
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 
 1 யெகோவாவே, தாவீதையும் 
அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும். 
 2 அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, 
யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்: 
 3 “நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், 
என் படுக்கைக்குப் போகவுமாட்டேன். 
 4 என் கண்களுக்கு நித்திரையையும், 
கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன். 
 5 யெகோவாவுக்காக ஒரு இடத்தை, 
யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை 
இவற்றைச் செய்யமாட்டேன்.” 
 6 எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, 
யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்: 
 7 “நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், 
அவருடைய பாதபடியில் வழிபடுவோம். 
 8 ‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும், 
உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும். 
 9 உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; 
உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ” 
 10 உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம், 
நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும். 
 11 யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்; 
அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்: 
“உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை 
நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன். 
 12 உன் மகன்கள் என் உடன்படிக்கையையும், 
நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால், 
அவர்களுடைய மகன்களும் 
என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.” 
 13 யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; 
அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்: 
 14 “இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்; 
இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால், 
இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன். 
 15 நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்; 
அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன். 
 16 அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்; 
அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள். 
 17 “இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; 
நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன். 
 18 அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்; 
ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.”