அத்தியாயம் 31
லேமுவேலிற்கு சொல்லப்பட்ட வசனங்கள் 
 1 ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; 
அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்: 
 2 என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, 
என்னுடைய பொருத்தனைகளின் மகனே, 
 3 பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் 
ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே. 
 4 திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; 
லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; 
மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. 
 5 மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, 
சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். 
 6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; 
 7 அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, 
தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும். 
 8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் 
உன்னுடைய வாயைத் திற. 
 9 உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, 
சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய். 
 10 குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? 
அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது. 
 11 அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; 
அவனுடைய செல்வம் குறையாது. 
 12 அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, 
நன்மையையே செய்கிறாள். 
 13 ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, 
தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள். 
 14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; 
தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள். 
 15 இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, 
தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். 
 16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; 
தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள். 
 17 தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, 
தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள். 
 18 தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; 
இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும். 
 19 தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; 
அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். 
 20 சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, 
ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள். 
 21 தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், 
தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள். 
 22 இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; 
மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை. 
 23 அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது 
பெயர் பெற்றவனாக இருக்கிறான். 
 24 மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; 
கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். 
 25 அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; 
வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். 
 26 தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; 
தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது. 
 27 அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், 
தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள். 
 28 அவளுடைய பிள்ளைகள் எழும்பி, 
அவளை பாக்கியவதி என்கிறார்கள்; 
அவளுடைய கணவன் அவளைப்பார்த்து: 
 29 அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; 
நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான். 
 30 செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், 
யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள். 
 31 அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; 
அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.