32
எலிகூ பேசுதல் 
 1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள்.  2 ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான்.  3 அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள்.  4 எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள்.  5 ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது. 
 6 எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்: 
“நான் வயதில் இளையவன், 
நீங்களோ முதியவர்கள்; 
அதினால் நான் அறிந்ததைத் துணிந்து 
சொல்லப் பயந்திருந்தேன். 
 7 ‘முதியோர் பேசட்டும், 
வயது சென்றவர்கள் ஞானத்தைப் போதிக்கட்டும்’ என எண்ணியிருந்தேன். 
 8 மனிதரில் இருக்கும் ஆவியாகிய 
எல்லாம் வல்லவரின் சுவாசமே அவனுக்கு அறிவாற்றலைக் கொடுக்கிறது. 
 9 முதியோர் மட்டுமே ஞானிகளல்ல; 
வயதானவர்கள் மட்டுமே சரியானதை அறிந்தவர்களுமல்ல. 
 10 “ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்; 
எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன். 
 11 நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து, 
உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து, 
உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன். 
 12 நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன். 
ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை; 
அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை. 
 13 ‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல, 
இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம். 
 14 யோபு என்னோடு வாதாடவில்லை, 
நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன். 
 15 “அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்; 
அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. 
 16 இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில், 
நான் பொறுத்திருக்க வேண்டுமோ? 
 17 இப்பொழுது நானும் பேசியே தீருவேன்; 
நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன். 
 18 பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு, 
எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது; 
 19 என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும், 
வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது. 
 20 நான் பேசி ஆறுதலடைய வேண்டும்; 
என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும். 
 21 நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ, 
எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன். 
 22 நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால், 
என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.