அத்தியாயம் 16
யோபுவின் வார்த்தைகள் 
 1 அதற்கு யோபு மறுமொழியாக: 
 2 “இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; 
நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர். 
 3 காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? 
இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? 
 4 உங்களைப்போல நானும் பேசமுடியும்; 
நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், 
நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, 
உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும். 
 5 ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், 
என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். 
 6 நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; 
நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்? 
 7 இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; 
என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர். 
 8 நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி; 
என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, 
என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும். 
 9 என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, 
என் மேல் கோபப்படுகிறான்; 
என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். 
 10 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்; 
இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; 
என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள். 
 11 தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, 
துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார். 
 12 நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; 
அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, 
என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார். 
 13 அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; 
என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; 
என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார். 
 14 நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; 
பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார். 
 15 நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; 
என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன். 
 16 அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; 
மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. 
 17 என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், 
என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது. 
 18 பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; 
என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. 
 19 இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. 
எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். 
 20 என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; 
என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது. 
 21 ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, 
தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும். 
 22 குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; 
நான் திரும்பிவராதவழியே போவேன்.