15
 1 சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்; 
ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது. 
 2 ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்; 
ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்தை வெளிக்காட்டும். 
 3 யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன, 
அவை கொடியவர்களையும் நல்லவர்களையும் உன்னிப்பாய் கவனிக்கின்றன. 
 4 சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது, 
ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும். 
 5 மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்; 
ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்களோ விவேகிகள். 
 6 நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு, 
ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும். 
 7 ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும், 
ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை. 
 8 யெகோவா கொடியவர்களின் பலியை அருவருக்கிறார், 
ஆனால் நீதிமான்களின் ஜெபம் அவரை மகிழ்ச்சியூட்டும். 
 9 யெகோவா கொடியவர்களின் வழியை அருவருக்கிறார், 
ஆனால் அவர் நீதியைப் பின்பற்றுகிறவர்களை நேசிக்கிறார். 
 10 வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது, 
கண்டித்துத் திருத்துதலை வெறுப்பவர்கள் சாவார்கள். 
 11 பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, 
மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்! 
 12 கேலி செய்பவர்கள் திருத்துவதை வெறுக்கிறார்கள், 
அவர்கள் ஞானமுள்ளவரிடம் ஆலோசனை கேட்கமாட்டார்கள். 
 13 மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்; 
ஆனால் இருதயத்தின் வேதனையோ ஆவியை நொறுங்கச்செய்யும். 
 14 பகுத்தறியும் இருதயம் அறிவைத் தேடுகிறது, 
ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்திலேயே மேய்கிறது. 
 15 ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நாட்கள் எல்லாம் அவலமானவை, 
ஆனால் மகிழ்ச்சியான இருதயத்திற்கு எல்லா நாளும் விருந்து. 
 16 அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட, 
சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது. 
 17 பகையோடு பரிமாறப்படும் நல்ல இறைச்சி உணவைவிட, 
அன்போடு கிடைக்கும் காய்கறி உணவே சிறந்தது. 
 18 முற்கோபிகள் சண்டையைத் தூண்டிவிடுகிறார்கள்; 
ஆனால் பொறுமையுள்ளவர்கள் வாக்குவாதத்தை நிறுத்துகிறார்கள். 
 19 சோம்பேறியின் வழி முள்வேலியினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது; 
ஆனால் நீதிமான்களின் வழி நன்கு கட்டமைக்கப்பட்ட சாலையாயிருக்கிறது. 
 20 ஞானமுள்ள பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள், 
மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியம்பண்ணுகிறான். 
 21 புத்தியற்றவர்களுக்கு மூடத்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, 
ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் நேர்வழியில் செல்கிறார்கள். 
 22 ஆலோசனை குறைவுபடுவதால் திட்டங்கள் தோல்வியடையும், 
அநேகர் ஆலோசித்து செயல்பட்டால் அவை வெற்றிபெறும். 
 23 தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது; 
காலத்திற்கு ஏற்ற வார்த்தை எவ்வளவு நலமானது! 
 24 வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, 
அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். 
 25 பெருமையுள்ளவரின் வீட்டை யெகோவா இடித்துப்போடுகிறார், 
ஆனால் விதவையின் எல்லைகளையோ அவர் பாதுகாக்கிறார். 
 26 கொடியவர்களின் சிந்தனைகளை யெகோவா அருவருக்கிறார், 
ஆனால் கருணைமிக்க வார்த்தைகள் அவருடைய பார்வையில் தூய்மையானவை. 
 27 பேராசைக்காரர் தன் குடும்பத்திற்குத் தொல்லையைக் கொண்டுவருகிறார்கள், 
ஆனால் இலஞ்சத்தை வெறுப்பவர்கள் நல்வாழ்வடைவார்கள். 
 28 நீதிமான்களின் இருதயம் பதில் சொல்லுமுன் கவனமாக சிந்திக்கிறது, 
ஆனால் கொடியவர்களின் வாய் தீமையைக் கக்குகிறது. 
 29 யெகோவா கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறார், 
ஆனால் அவர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார். 
 30 மகிழ்ச்சியான பார்வை இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; 
நற்செய்தி எலும்புகளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது. 
 31 வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள் 
ஞானிகளோடு குடியிருப்பார்கள். 
 32 அறிவுரையை உதாசீனம் செய்கிறவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்; 
ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறார்கள். 
 33 யெகோவாவுக்குப் பயந்து நடப்பது ஞானத்தைப் போதிக்கிறது, 
கனத்திற்கு முன்பு தாழ்மை.