௩
யோபு தான் பிறந்தநாளை சபிக்கிறான் 
 ௧ பின்பு யோபு தன் வாயைத் திறந்து தான் பிறந்த 
நாளை சபித்தான். 
 ௨-௩ அவன், “நான் பிறந்தநாள் என்றென்றும் இராதபடி அழிக்கப்படட்டும் என நான் விரும்புகிறேன். 
‘அது ஒரு ஆண்’ என அவர்கள் கூறிய இரவு, என்றும் இருந்திருக்கக் கூடாதென நான் விரும்புகிறேன்! 
 ௪ அந்நாள் இருண்டு போக விரும்புகிறேன். 
அந்நாளை தேவன் மறக்க வேண்டுமென விரும்புகிறேன். 
அந்நாளில் ஒளி பிரகாசித்திருக்கக் கூடாதென விரும்புகிறேன். 
 ௫ மரணம் எவ்வளவு இருட்டோ அதுபோல், அந்நாள் அவ்வளவு இருளாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். 
இருண்ட மேகங்கள் அந்நாளை மறைக்கட்டுமெனவும், நான் பிறந்த நாளிலிருந்த இருண்ட மேகங்கள் ஒளியை அச்சுறுத்தட்டும் எனவும் நான் விரும்புகிறேன். 
 ௬ இருள் நான் பிறந்த அந்த இரவை ஆக்கிரமிக்கட்டும். 
நாள்காட்டியிலிருந்து அந்த இரவு நீக்கப்படட்டும். 
எந்த மாதத்திலும் அந்த இரவைச் சேர்க்க வேண்டாம். 
 ௭ அந்த இரவு எதையும் விளைவிக்காதிருக்கட்டும். 
அவ்விரவில் மகிழ்ச்சியான எந்த ஒலியும் கேளாதிருக்கட்டும். 
 ௮ சில மந்திரவாதிகள் லிவியாதானை* லிவியாதான் இங்கு இது உண்மையில் கடல் மிருகமான ராட்சசனாகும். சில ஜனங்கள் இதுதான் சூரியனை விழுங்கும் என்று எண்ணுகின்றனர், இதுவே சூரிய கிரகணத்திற்குக் காரணம். எழுப்ப விரும்புகிறார்கள். 
அவர்கள் சாபங்கள் இடட்டும். 
நான் பிறந்தநாளை அவர்கள் சபிக்கட்டும். 
 ௯ அந்நாளின் விடிவெள்ளி இருளாகட்டும். 
அந்த இரவு விடியலின் ஒளிக்காகக் காத்திருக்கட்டும், ஆனால் அந்த ஒளி ஒருபோதும் வராதிருக்கட்டும். 
சூரியனின் முதல் கதிர்களை அது பார்காதிருக்கட்டும். 
 ௧௦ ஏனெனில், அந்த இரவு நான் பிறப்பதைத் தடை செய்யவில்லை. 
இத்தொல்லைகளை நான் காணாதிருக்கும்படி, அந்த இரவு என்னைத் தடை செய்யவில்லை. 
 ௧௧ நான் பிறந்தபோதே ஏன் மரிக்கவில்லை? 
நான் ஏன் பிறப்பில் மடியவில்லை? 
 ௧௨ ஏன் என் தாய் என்னை அவளது ழுழங்காலில் தாங்கிக்கொண்டாள்? 
ஏன் என் தாயின் மார்புகள் எனக்குப் பாலூட்டின? 
 ௧௩ நான் பிறந்தபோதே மரித்திருந்தால், இப்போது சமாதானத்தோடு இருந்திருப்பேன். 
 ௧௪ முற்காலத்தில் பூமியில் வாழ்ந்த அரசர்களோடும் ஞானிகளோடும் நான் உறக்கமாகி ஓய்வுக்கொண்டிருக்க விரும்புகிறேன். 
இப்போது அழிக்கப்பட்டுக் காணாமற்போன இடங்களைத் தங்களுக்காக அவர்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள். 
 ௧௫ அவர்கள் தங்கள் வீடுகளைப் பொன்னாலும் வெள்ளியாலும் நிரப்பினர், 
அவர்களோடு கூட புதைக்கப்பட்டிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். 
 ௧௬ பிறப்பில் மரித்துப் புதைக்கப்பட்ட குழந்தையாய் நான் ஏன் இருக்கவில்லை? 
பகலின் ஒளியைக் கண்டிராத குழந்தையைப்போன்று இருந்திருக்கமாட்டேனா என விரும்புகிறேன். 
 ௧௭ கல்லறையில் இருக்கும்போது தீயோர், தொல்லை தருவதை நிறுத்துகிறார்கள். 
சோர்வுற்ற ஜனங்கள் கல்லறையில் ஓய்வெடுக்கிறார்கள். 
 ௧௮ சிறைக் கைதிகளும்கூட கல்லறையில் சுகம் காண்கிறார்கள். 
அவர்களைக் காப்போர் அவர்களை நோக்கிக் கூக்குரல் இடுவதை அவர்கள் கேட்பதில்லை, 
 ௧௯ முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் எனப் பலவகை ஜனங்கள் கல்லறையில் இருக்கிறார்கள். 
அடிமையுங்கூட எஜமானனிடமிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறான். 
 ௨௦ “துன்புறும் ஒருவன் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்? 
கசந்த ஆன்மாவுடைய ஒருவனுக்கு ஏன் கசந்து வாழவேண்டும்? 
 ௨௧ அம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை. 
துக்கமுள்ள அம்மனிதன் மறைந்த பொக்கிஷத்தைப் பார்க்கிலும் மரணத்தைத் தேடுகிறான். 
 ௨௨ அந்த ஜனங்கள் தங்கள் கல்லறைகளைக் காண்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். 
அவர்கள் தங்கள் புதை குழியைக் (கல்லறையை) கண்டு களிப்படைகிறார்கள். 
 ௨௩ ஆனால் தேவன் எதிர்காலத்தை இரகசியமாக வைத்திருக்கிறார். 
அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் ஒரு சுவரை எழுப்புகிறார். 
 ௨௪ சாப்பிடும் நேரத்தில் நான் துன்பத்தால் பெரு மூச்சு விடுகிறேன். 
மகிழ்ச்சியினால் அல்ல. என் முறையீடுகள் தண்ணீரைப் போல வெளிப்படுகின்றன. 
 ௨௫ ஏதோ பயங்கரம் எனக்கு நிகழலாம் என அஞ்சியிருந்தேன். 
அதுவே எனக்கு நிகழ்ந்துள்ளது! 
நான் மிகவும் அஞ்சியது எனக்கு நேரிட்டது! 
 ௨௬ நான் அமைதியுற முடியவில்லை. 
என்னால் இளைப்பாற முடியவில்லை. 
நான் ஓய்வெடுக்க இயலவில்லை. 
நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன்!” என்றான். 
*௩:௮: லிவியாதான் இங்கு இது உண்மையில் கடல் மிருகமான ராட்சசனாகும். சில ஜனங்கள் இதுதான் சூரியனை விழுங்கும் என்று எண்ணுகின்றனர், இதுவே சூரிய கிரகணத்திற்குக் காரணம்.