12
துதியின் கீதங்கள் 
 1 அந்த நாளிலே நீ: 
“யெகோவாவே உம்மைத் துதிப்பேன். 
என்னில் கோபமாயிருந்தபோதிலும், 
உமது கோபம் தணிந்து 
என்னைத் தேற்றியிருக்கிறீர். 
 2 நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு; 
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன். 
யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்; 
அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய். 
 3 நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து 
மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய். 
 4 அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது: 
“யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்; 
அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள், 
அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள். 
 5 யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்; 
உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும். 
 6 சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; 
ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர் 
மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”