18
எத்தியோப்பியாவுக்கு எதிரான இறைவாக்கு 
 1 எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால், 
இரைச்சலையுடைய செட்டைகளின் நாடே, ஐயோ உனக்குக் கேடு! 
 2 இந்த நாடு நாணல் படகுகளில் தண்ணீரின்மேல் 
கடல் வழியாகத் தூதுவரை அனுப்புகிறது. 
விரைந்து செல்லும் தூதுவர்களே, 
உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், 
தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடம் போங்கள். 
இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; 
இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. 
 3 உலகத்தில் வாழ்பவர்களும், 
பூமியின் குடிமக்களே, நீங்கள் யாவரும் 
மலைமேல் கொடியேற்றப்படும்போது, 
அதைக் காண்பீர்கள். 
எக்காளம் முழங்கும்போது 
அதைக் கேட்பீர்கள். 
 4 யெகோவா என்னிடம் கூறுவது இதுவே: 
“சூரிய ஒளியின் இளஞ்சூட்டைப் போலவும், 
அறுவடைகால வெப்பத்தின்போது வரும் மூடுபனிபோலவும் 
நான் என்னுடைய உறைவிடத்தில் அமைதியாய் இருந்து பார்ப்பேன்.” 
 5 ஏனெனில் அறுவடைக்குமுன், 
திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது, 
யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும், 
படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார். 
 6 அவையெல்லாம் இரைபிடிக்கும் மலைகளின் பிணந்தின்னும் பறவைகளுக்கும், 
காட்டு மிருகங்களுக்கும் விடப்படும்; 
பிணந்தின்னும் பறவைகள் கோடைகாலத்திலும், 
காட்டு மிருகங்கள் மாரிகாலத்திலும் அவைகளைத் தின்னும். 
 7 உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், 
தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடமிருந்து 
சேனைகளின் யெகோவாவுக்கு அந்நேரத்தில் கொடைகள் கொண்டுவரப்படும். 
இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; 
இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. 
இந்தக் கொடைகள் சேனைகளின் யெகோவாவினுடைய பெயருக்குரிய இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டுவரப்படும்.