25
யெகோவாவுக்குத் துதி 
 1 யெகோவாவே, நீரே என் இறைவன்; 
நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன். 
அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்; 
நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி, 
பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர். 
 2 நீர் அந்நியரின் பட்டணத்தை இடிபாடுகளின் குவியலாக்கினீர்; 
அரணான பட்டணத்தைப் பாழாக்கினீர். 
அந்நியரின் அரண் இனிமேலும் ஒரு பட்டணமாயிராது; 
அது இனியொருபோதும் திரும்பக் கட்டப்படுவதுமில்லை. 
 3 ஆகவே வலிமையுள்ள மக்கள் கூட்டங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; 
இரக்கமற்ற நாடுகளின் பட்டணங்கள் உம்மைக் கனம்பண்ணும். 
 4 நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்; 
வறுமையுற்றோரின் துயரில் அவர்களுக்கு அடைக்கலமாயிருந்தீர். 
புயலிலிருந்து காக்கும் புகலிடமாகவும், 
வெயிலிலிருந்து காக்கும் நிழலாகவும் இருந்தீர். 
முரடர்களின் மூச்சு, 
ஒரு மதிலுக்கு எதிராக வீசும் புயலைப்போல் இருக்கிறது. 
 5 அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது. 
அந்நியரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடக்குகிறீர்; 
மேகத்தின் நிழலால் வெப்பம் தணிவதுபோல, 
இரக்கமற்றோரின் பாடலும் அடங்கிப் போகிறது. 
 6 சேனைகளின் யெகோவா இந்த மலைமேல் எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் 
சிறப்பான விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுவார். 
நன்றாகப் பதப்படுத்தப்பட்ட பழைய திராட்சை இரசமும், 
சிறந்த இறைச்சிகளும், 
உயர்வகை திராட்சை இரசமும் நிறைந்த விருந்தாக அது இருக்கும். 
 7 இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும் 
மூடியிருந்த மூடுதிரையை அவர் இந்த மலையில் அழிப்பார்; 
இதுவே எல்லா நாடுகளையும் மூடியிருந்த திரைச்சீலையாகும். 
 8 மரணம் என்றென்றும் இல்லாதபடி அவர் அதை விழுங்கிவிடுவார். 
ஆண்டவராகிய யெகோவா எல்லா முகங்களிலுமுள்ள 
கண்ணீரைத் துடைத்துவிடுவார். 
அவர் பூமியெங்குமுள்ள தன் மக்களின் 
அவமானத்தை நீக்கிவிடுவார். 
யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார். 
 9 அந்த நாளிலே மக்கள் கூட்டங்கள், 
“நிச்சயமாக இவரே நம் இறைவன்; நாம் இவரில் நம்பிக்கை வைத்தோம், 
இவர் எங்களை மீட்டார். 
இவரே யெகோவா, இவரில் நாம் நம்பிக்கை வைத்தோம்; 
இவர் கொடுக்கும் இரட்சிப்பில் நாம் மகிழ்ந்து களிகூருவோம்” என்பார்கள். 
 10 யெகோவாவின் கரம் இந்த சீயோன் மலையில் தங்கும்; 
வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல், 
மோவாபியர் அவரின்கீழ் மிதிக்கப்படுவார்கள். 
 11 நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல், 
மோவாபியர் தங்கள் கைகளை விரிப்பார்கள்; 
அவர்களுடைய கைகளில் திறமை இருந்தபோதிலும், 
இறைவன் அவர்களுடைய பெருமையைச் சிறுமைப்படுத்துவார். 
 12 மோவாபின் உயரமான அரண்செய்யப்பட்ட மதில்களை 
அவர் கீழே தள்ளி விழ்த்துவார். 
அவைகளை அவர் நிலத்தின் புழுதியில் கீழே 
தள்ளிப் போடுவார்.