47
பெலிஸ்தியரைப் பற்றிய செய்தி 
 1 பார்வோன், காசாவைத் தாக்குவதற்கு முன் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: 
 2 யெகோவா கூறுவது இதுவே: 
“பாருங்கள், வடக்கிலே வெள்ளம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது. 
அது கரைபுரண்டோடும் வெள்ளமாகும். 
அது நாட்டின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும் புரண்டோடும். 
பட்டணங்கள்மேலும், அதில் வாழும் யாவர்மேலும் புரண்டோடும். 
மக்கள் அலறி அழுவார்கள். 
நாட்டில் குடியிருப்போர் எல்லோரும் புலம்புவார்கள். 
 3 பாய்ந்தோடும் குதிரைகளின் குளம்புகளின் ஒலியையும், 
பகைவர்களின் தேர்களின் சத்தத்தையும், 
தேர்ச்சக்கரங்களின் இரைச்சலையும் கேட்டு ஓலமிடுவார்கள். 
தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யும்படி திரும்பமாட்டார்கள். 
அவர்களுடைய கைகள் சோர்ந்துபோகும். 
 4 ஏனெனில் பெலிஸ்தியர் அனைவரையும் 
அழிக்கும் நாள் வந்திருக்கிறது. 
தீருவுக்கும் சீதோனுக்கும் உதவிசெய்யக்கூடிய, 
இன்னும் தப்பியிருப்பவர்களை அழிப்பதற்கான நாள் வந்திருக்கிறது. 
கப்தோரின் கரையோரத்தில் மீதியாயிருக்கும் 
பெலிஸ்தியரை யெகோவா அழிக்கப்போகிறார். 
 5 காசா துக்கங்கொண்டாடுதலுக்காக தன் தலையை மொட்டையடிக்கும். 
அஸ்கலோன் மவுனமாய் இருக்கும். 
சமவெளியில் மீதியாயிருப்பவர்களே, 
எவ்வளவு காலத்திற்கு உங்களை நீங்களே வெட்டிக்கொள்வீர்கள்? 
 6 “ ‘ஐயோ! யெகோவாவின் வாளே! 
நீ ஓய்வதற்கு எவ்வளவு காலம் செல்லும்? 
உறைக்குத் திரும்பி அங்கு ஓய்ந்திரு 
என்று நீங்கள் கதறுகிறீர்களே!’ 
 7 ஆனால் அஸ்கலோனையும், 
கரையோரப் பகுதிகளையும் தாக்கும்படி, 
யெகோவா கட்டளையிட்டு உத்தரவு கொடுத்திருக்க 
அது எப்படி ஓய்ந்திருக்கும்?”