2
நினிவேயின் வீழ்ச்சி 
 1 நினிவே பட்டணமே, உன்னைத் தாக்குகிறவன் உனக்கெதிரே முன்னேறி வருகிறான்; 
கோட்டையைக் காவல் செய், 
வீதியை கண்காணி, 
உன்னைத் திடப்படுத்திக்கொள், 
உன் முழுப் பெலத்தையும் ஒன்றுதிரட்டு. 
 2 அசீரியர் இஸ்ரயேலைப் பாழாக்கி, 
அவர்களின் திராட்சைத் தோட்டங்களை அழித்துப்போட்டாலும், 
யெகோவா இஸ்ரயேலின் மாட்சிமையை, 
யாக்கோபின் மாட்சிமையைப்போல் திரும்பவும் அமைத்துக்கொடுப்பார். 
 3 நினிவேயைத் தாக்குகிற 
இராணுவவீரர்களின் கேடயங்கள் சிவப்பாய் இருக்கின்றன. 
போர்வீரர்கள் சிவப்பு உடை உடுத்தியிருக்கிறார்கள். 
தேர்கள் ஆயத்தப்படும் நாளிலே அவற்றிலுள்ள உலோகம் மினுங்குகிறது. 
தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகள் ஆயத்தமாக்கப்படுகின்றன. 
 4 தேர்கள் நகரத்திற்கு வெளியே வீதிகளின் வழியாக சதுக்கங்களில் ஓடி, 
கடகடவென்றோடி, இங்கும் அங்கும் விரைகின்றன. 
அவை சுடர் விட்டெரியும் தீப்பந்தம்போல் காணப்படுகின்றன, 
அவை மின்னலைப்போல் பறக்கின்றன. 
 5 நினிவேயின் அரசன் தான் தெரிந்தெடுத்த வீரர்களை அழைப்பிக்கிறான். 
இருந்தும் அவர்கள் தங்கள் வழியில் இடறுகிறார்கள். 
அவர்கள் பட்டணத்து சுவரை நோக்கி விரைகிறார்கள். 
பாதுகாப்புக்கான கேடயம் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. 
 6 ஆனாலும் தாக்குகிறவன் உட்புகுந்துவிட்டான், 
ஆற்றின் மதகுகள் திறந்து விடப்படுகின்றன; அரண்மனை சரிந்து விழுகிறது. 
 7 இது நினிவே என்று தீர்மானிக்கப்படுகிறது 
பட்டணத்திலுள்ளவர்களை நாடுகடத்திக் கொண்டுபோக உத்தரவிடப்பட்டது. 
பட்டணத்துப் பணிப்பெண்கள் தங்கள் மார்பில் அடித்து, 
புறாக்களைப்போல் புலம்புகிறார்கள். 
 8 நினிவே தண்ணீர் நிறைந்த குளம்போல் இருக்கிறது. 
அதன் தண்ணீரோ வடிந்து ஓடுகிறது. 
“நில்லுங்கள், நில்லுங்கள்!” என்று அவர்கள் அழுகிறார்கள். 
ஆனால் ஒருவனும் திரும்பி வருவதில்லை. 
 9 வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், 
தங்கத்தையும் கொள்ளையிடுங்கள்; 
அதன் கருவூலங்களில் இருக்கும் திரவியங்களுக்குக் 
குறைவில்லை, என்று தாக்குகிறவர்கள் சொல்கிறார்கள். 
 10 நினிவே கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, வெறுமையாக்கப்பட்டுள்ளது! 
உள்ளங்கள் கலங்குகின்றன, முழங்கால்கள் தள்ளாடுகின்றன, உடல்கள் நடுங்குகின்றன, 
எல்லா முகங்களும் வெளிறிப்போய் இருக்கின்றன. 
 11 அசீரியன் ஒரு சிங்கம்போல் இருந்தான். 
ஆனால் இப்பொழுதோ சிங்கங்களின் குகை எங்கே? 
அவை தமது குட்டிகளுக்கு இரை கொடுத்த இடம் எங்கே? 
சிங்கமும், அதன் பெண் சிங்கமும் குட்டிகளுடன் பயமின்றிபோன இடம் எங்கே? 
 12 சிங்கம் தன் குட்டிகளுக்குப் போதிய அளவு இரையைக் கொன்று. 
தன் துணைச் சிங்கத்திற்குத் தேவையான இரையைத் பிடித்துக் கொன்று. 
தான் கொன்றவைகளினால் தன் இடங்களையும், 
இரையினால் தன் குகையையும் நிரப்பியது. 
 13 நினிவேயே, “நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன்” 
என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். 
“புகை எழும்பும்படி உன் தேர்களை எரிப்பேன், 
உன் சிங்கக்குட்டிகள் வாளினால் அழியும். 
பூமியில் உங்களுக்கு இரையில்லாமல் போகச்செய்வேன். 
உங்கள் தூதுவர்களின் குரல்கள் 
இனிமேலும் கேட்கப்படுவதில்லை.”