14
 1 ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டுகிறாள்; 
ஆனால் அறிவில்லாதவளோ தன் கைகளினாலேயே அதை இடித்துப்போடுகிறாள். 
 2 நேர்மையான வழியில் செல்கிறவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறார்கள், 
அவரை அசட்டை பண்ணுகிறவர்கள் தங்கள் வழிகளில் மாறுபாடுள்ளவர்கள். 
 3 மூடரின் பெருமையான பேச்சு அவர்களுடைய முதுகுக்கே பிரம்படி; 
ஆனால் ஞானிகளின் உதடுகளோ அவர்களைப் பாதுகாக்கும். 
 4 எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; 
ஆனால் எருதின் பலத்தினால் மிகுந்த அறுவடை உண்டு. 
 5 மெய்ச்சாட்சிக்காரர் பொய்ப் பேசமாட்டார்கள், 
ஆனால் பொய்சாட்சிக்காரர் மூச்சுக்கு மூச்சு பொய்ப் பேசுவார்கள். 
 6 ஏளனம் செய்பவர்கள் ஞானத்தைத் தேடியும் அதைக் கண்டுபிடிப்பதில்லை, 
ஆனால் பகுத்தறிவு உள்ளவர்களுக்கோ புத்தி இலகுவாக வருகிறது. 
 7 மூடரின் வழியைவிட்டு விலகியிரு, 
ஏனெனில் அவர்களுடைய உதடுகளில் நீ அறிவைக் காணமாட்டாய். 
 8 தங்கள் வழியைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதே விவேகிகளின் ஞானம், 
ஆனால் மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். 
 9 பாவத்திற்கு பரிகாரம் செய்வதை மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், 
ஆனால் நீதிமான்களின் மத்தியில்தான் அதற்கு நல்லெண்ணம் காணப்படுகிறது. 
 10 ஒவ்வொரு இருதயத்தின் கசப்பும் அதற்கு மட்டுமே தெரியும்; 
அதின் மகிழ்ச்சியையும் வேறு யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது. 
 11 கொடியவர்களின் வீடு அழிக்கப்படும், 
ஆனால் நீதிமான்களின் கூடாரமோ செழித்தோங்கும். 
 12 மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; 
முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும். 
 13 சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; 
மகிழ்ச்சியும்கூட துயரத்தில் முடிவடையலாம். 
 14 பின்வாங்கிப் போகிற இருதயமுள்ளவர்கள் தங்கள் வழிகளுக்கான தண்டனையை முழுமையாக அனுபவிப்பார்கள்; 
நல்லவர்கள் தங்களுடைய வழிகளுக்கான வெகுமதியைப் பெறுவார்கள். 
 15 அறிவில்லாதவர்கள் எதையும் நம்புகிறார்கள்; 
ஆனால் விவேகமுள்ளவர்கள் தங்கள் நடைகளைக் குறித்துக் கவனமாயிருப்பார்கள். 
 16 ஞானமுள்ளவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, தீமைக்கு விலகி நடக்கிறார்கள்; 
ஆனால் மூடர்கள் மோசமான மனநிலையிலிருந்தும் பாதுகாப்பாய் உணர்கிறார்கள். 
 17 முன்கோபக்காரன் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறான்; 
தீயத் தந்திரமுள்ளவன் வெறுக்கப்படுகிறான். 
 18 அறிவற்றவர்கள் மூடத்தனத்தை உரிமையாக்கிக் கொள்கிறார்கள்; 
ஆனால் விவேகிகளுக்கு அறிவு மகுடமாயிருக்கிறது. 
 19 தீயவர்கள் நல்லவர்கள் முன்னும், 
கொடியவர்கள் நீதிமான்களின் வாசல்களிலும் விழுந்து பணிவார்கள். 
 20 ஏழைகள் தங்கள் அயலவர்களாலும் வெறுக்கப்படுகிறார்கள்; 
ஆனால் செல்வந்தர்களுக்கோ அநேக சிநேகிதர்கள் உண்டு. 
 21 தன் அயலாரை அலட்சியம் செய்வது பாவம்; 
ஏழைகளுக்கு இரங்குகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 
 22 தீமைக்காக சதிசெய்கிறவர்கள் வழிதப்பிப் போவார்கள் அல்லவா? 
ஆனால் நன்மையைத் திட்டமிடுபவர்கள் அன்பையும் உண்மையையும் கண்டுகொள்கிறார்கள். 
 23 கடும் உழைப்பெல்லாம் இலாபத்தைக் கொண்டுவரும்; 
ஆனால் வெறும் பேச்சோ ஏழ்மைக்கே வழிநடத்தும். 
 24 ஞானிகளின் செல்வமே அவர்களுக்கு மகுடம், 
ஆனால் மூடர்களின் மடமை மூடத்தனத்தையே பிறப்பிக்கிறது. 
 25 மெய்ச்சாட்சி உயிர்களைக் காப்பாற்றுகிறது, 
ஆனால் பொய்ச்சாட்சி ஏமாற்றுகிறது. 
 26 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையுண்டு; 
அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலம். 
 27 யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே வாழ்வின் ஊற்று; 
அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது. 
 28 அதிக மக்கட்தொகை அரசனின் மகிமை, 
ஆனால் குடிமக்கள் குறைய இளவரசன் அழிந்துவிடுவான். 
 29 பொறுமையுள்ளவர் மிகுந்த புரிந்துகொள்ளுதல் உள்ளவர்; 
ஆனால் முற்கோபக்காரர்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள். 
 30 மன அமைதி உடலுக்கு சுகத்தைக் கொடுக்கிறது; 
ஆனால் பொறாமை எலும்புகளில் புற்றுநோய் போன்றது. 
 31 ஏழைகளை ஒடுக்குகிறவர்கள் அவர்களைப் படைத்தவரை அவமதிக்கிறார்கள்; 
ஆனால் ஏழைகளுக்குத் தயவு பண்ணுகிறவர்கள் இறைவனைக் கனம்பண்ணுகிறார்கள். 
 32 பேரழிவு வரும்போது கொடியவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்; 
ஆனால் நீதிமான்களோ மரணத்திலும் இறைவனில் புகலிடம் தேடுகிறார்கள். 
 33 பகுத்தறிகிறவர்களின் இருதயத்திலே ஞானம் தங்கியிருக்கிறது; 
மூடர்களிடம் அதற்கு வாய்ப்பில்லை. 
 34 நீதி ஒரு நாட்டையே உயர்த்தும், 
ஆனால் பாவம் எந்த மக்களுக்கும் அவமானம். 
 35 ஞானமுள்ள பணியாளனால் அரசன் மகிழ்ச்சி அடைகிறான், 
ஆனால் வெட்கத்திற்குரிய பணியாளன் அரசனின் கடுங்கோபத்திற்கே உள்ளாகிறான்.