எபிரெயருக்கு எழுதின கடிதம்  
 1
இறைவனின் கடைசி வார்த்தை: அவருடைய மகன் 
 1 முற்காலத்தில் இறைவன் பலமுறை, வெவ்வேறு விதங்களில் இறைவாக்கினர்கள் மூலமாய் நமது முற்பிதாக்களுடன் பேசினார்.  2 ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் உரிமையாளராய் நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார்.  3 இறைவனுடைய மகனே அவருடைய மகிமையின் ஒளியாயும், அவருடைய தன்மையின் ரூபமாயும் இருக்கிறார். இந்த கிறிஸ்துவே தம்முடைய வல்லமையான வார்த்தையினாலே எல்லாவற்றையும் தாங்குகிறார். இவர் பாவங்களுக்கான சுத்திகரிப்பை ஏற்படுத்தி முடித்தபின்பு, பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய வலதுபக்கத்தில்* 1:3 அதிகாரத்தின் இடம் உட்கார்ந்திருக்கிறார்.  4 இவ்விதமாய் இறைவனின் மகனாகிய கிறிஸ்து இறைத்தூதர்களிலும் மேன்மையானவர் ஆனார். இவருக்கு இறைவன் கொடுத்த பெயரும் இறைத்தூதர்களின் பெயரிலும் மேன்மையானதே. 
மகன் இறைத்தூதர்களிலும் மேன்மையானவர் 
 5 ஏனெனில் இறைவன் இறைத்தூதர்களில் யாரையாவது பார்த்து எப்பொழுதாவது இவ்வாறு சொல்லியிருக்கிறாரா? 
“நீர் என்னுடைய மகன்; 
இன்று நான் உமக்குத் தந்தையானேன்”† 1:5  சங். 2:7 
அல்லது, 
“நான் இவருடைய தந்தையாயிருப்பேன்; 
அவர் என்னுடைய மகனாயிருப்பார்.”‡ 1:5  2 சாமு. 7:14; 1 நாளா. 17:13 
 6 மேலும், இறைவன் தம்முடைய முதற்பேறானவரை உலகத்திற்குள் கொண்டுவந்தபோது அவர் கூறியது, 
“இறைவனுடைய தூதர்கள் எல்லோரும் அவரை வழிபடவேண்டும்.”§ 1:6  உபா. 32:43 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) 
 7 ஆனால் இறைத்தூதர்களைக்குறித்து பேசும்போது இறைவன் சொல்லுகிறதாவது, 
“அவர் தம்முடைய இறைத்தூதர்களைக் காற்றுகளாகவும், 
தம்முடைய ஊழியர்களை நெருப்பு ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.”* 1:7  சங். 104:4 
 8 ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கிறதாவது, 
“இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும். 
நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். 
 9 நீர் நீதியை விரும்பி, அநீதியை வெறுத்தீர்; 
ஆகையால் இறைவனே, உமது இறைவனே உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து, 
உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார்.”† 1:9  சங். 45:6,7 
 10 இறைவன் மேலும் சொன்னதாவது, 
“நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்; 
வானங்களும் உமது கரங்களின் வேலைப்பாடாய் இருக்கின்றன. 
 11 அவை அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; 
அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும். 
 12 அவற்றை ஒரு மேலுடையைப்போல் நீர் சுருட்டிவைப்பீர்; 
அவை ஒரு உடையைப்போல் மாற்றப்படும். 
நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர். 
உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை.”‡ 1:12  சங். 102:25-27 
 13 மேலும், இறைவன் இறைத்தூதர்களில் யாரையாவது பார்த்து எப்பொழுதாவது, 
“நான் உமது பகைவரை 
உமது கால்களுக்குப் பாதபடியாக்கும்வரை 
நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்”§ 1:13  சங். 110:1 
என்று சொல்லியிருக்கிறாரா? 
 14 இறைத்தூதர்களெல்லோரும் ஊழியம் செய்யும் ஆவிகள் அல்லவா? இரட்சிப்பை உரிமையாக்கிக்கொள்ளப் போகிறவர்களுக்குப் பணிசெய்யும்படி அனுப்பப்பட்டவர்களல்லவா?